Tuesday, January 22, 2013

நபிகள் - ராமன்

குகன் ராமனை சந்திக்கும் போது தேனும் மீனும் கொண்டு வந்தான். அதை ராமன் இவற்றை அருந்தினேன் என்று சொல்லி இந்த உணவு மிகவும் புனிதமானது என்று புகழ்ந்து சொன்னதாக இராமாயணத்தில் வருகிறது.

குகன் மனசு நோகக் கூடாது என்று ராமான் நினைத்ததாக சொல்கிறது.

ஒருமுறை நபிகளிடம் ஒரு பெண் திராட்சைப் பழம் கொண்டு வந்து நீங்கள் மட்டுமே உண்ணுமாறு வேண்டினாள். அவரும் எடுத்து உண்ண ஆரம்பித்து பின் யாருக்கும் பங்கிட்டுக் கொள்ளாமல் முழுவதுமாக சாப்பிட ஆரம்பித்தார். உடனிருந்தவர்கள் ஏன் எல்லோருக்கும் பங்கிடாமல் சாப்பிடுகிறார் என யோசித்தனர்.

சிறிது நேரத்திற்குப் பின் அந்த பெண்மணி சென்றவுடன் உடனிருந்தவர்கள் ஏன் எல்லோருக்கும் கொடுக்கவில்லை எனக்கேட்க ஒரு பழத்தை எடுத்து ஒருவரிடம் கொடுத்து உண்ணுமாறு சொன்னார். அதை சாப்பிட்டவர் தூ புளிக்கிறது எனத் துப்பினார். அந்த பெண் முன்னால் இது போல் நடந்து விடக்கூடாது என்பதால் யாருக்கும் கொடுக்கவில்லை என்றார்.

இரண்டு இடங்களிலும் ஒரே சிந்தனை தான். மற்றவர் மனம் கஷ்டப்படக்கூடாது என்பது தான்.


Monday, January 21, 2013

மந்திரம் - மொழி

இப்போது எல்லா கோவில்களிலும் மந்திரம் சொல்வது எந்த மொழியில் என்று வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வேதங்கள் சொன்ன மொழி ஒலி வடிவமைப்பை கொண்டு உருவானது. இந்த ஒலி அமைப்பை வைத்து மந்திரங்களை திரும்ப திரும்ப சொல்லும் போது ஒரு சக்தி உருவாகிறது.  அது கூடும் இடத்தில் மக்கள் சேருகிறார்கள். பயன்பெறுகிறார்கள்.

அந்த காலத்தில் வேதங்களை எல்லா விசயத்திற்கும் பயன்படுத்தினார்கள். வேதங்கள் மூலம் மந்திரங்களை சொல்லி எந்த காரியம் வேண்டுமானாலும் செய்யலாம். ஒருவரை கொலை செய்யும் அளவிற்கு இந்த மந்திரங்களை பயன்படுத்தலாம்.

ஒவ்வொரு மந்திரமும் இப்படித்தான் உச்சரிக்க வேண்டும் என்று விதி உள்ளது. அதை மீறி உச்சரிக்கும் போது எதிர்பார்த்த நன்மை அடைய முடியாது. உதாரணமாக "Rama" என்று சொல்லும் போது ராமா, ரமா என்று படிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தான் இந்த வேதங்களை எழுதக் கூடாது என முடிவு எடுத்தார்கள்.

தமிழ் மொழியிலும் இந்த மந்திரங்களை சொல்லலாம் ஏனென்றால் தமிழும் ஒலி அமைப்பைக் கொண்டு உருவானது.

கோவில் - தாய் - கருவரை

பல கோவில்களில் உள்ளே செல்ல நான்கு வாசல்கள் இருக்கும். இது எந்த வழியில் வந்தாலும் இறைவனை அடையலாம் எனச் சொல்வதற்காக வந்த மரபு.

எந்த நான்கு வழி ?

1. கர்ம யோகம்
2. ராஜயோகம்
3. ஞானயோகம்
4. பக்தியோகம்

கர்மமே கண்ணாக இருப்பது கர்மயோகம். குண்டலினியை பிரணாயாமத்தால் சஹஸ்ராரத்தில் கொண்டு சேர்ப்பது ராஜயோகம். இந்த ராஜயோகத்தால் லயப்பட்ட மனதை கட்டுப்படுத்துவதே ஞானயோகம். கடவுளின் துதி பாடுவது பக்தியோகம். 

இந்த நான்கு வழிகளில் எந்த வழியில் வேண்டுமானாலும் வரலாம் என்பதை விளக்குவதே நான்கு வாசல் அமைக்கப் பட்டது.

இங்கே நான்கு வழி வைத்தவன் கற்பகிரத்திற்கு ஒரே வழி வைத்தான். ஏன் ? கோவிலின் கற்பகிரகம் ஏன் இருட்டாக உள்ளது ? 

கோவிலின் கற்பகிரகம் என்பது ஒரு தாயின் கற்பகிரகத்தை போன்றது. தாயின் கற்பு இருக்கும் இடமும் இருட்டாகத்தான் இருக்கும். இங்கே ஒரே வழி தான் உள்ளே சென்று வருவதற்கு. அதே போல் தான் கோவில் கற்பகிரகமும். 

கற்பகிரத்தின் விமானத்தில் இருந்து காஸ்மிக் கதிர்கள் இந்த கற்பகிரகத்தை வந்தடையும். இப்போது இந்த கதிர்கள் வெளியே செல்ல ஒரே வாசல் உள்ளதால் அதன் வழியே வெளியே செல்லும். நாம் கோவிலுக்குள் செல்லும் போது சட்டையணிந்து செல்லக் கூடாது என்று ஒரு மரபு உண்டு. அப்படி செல்லும் போது இந்த கதிர்கள் நம் உடம்பை தாக்கும். அறிவியல் பூர்வமாக சிந்தித்தால் இந்த கருத்து நன்றாக நமக்குப் புரியும்.

ஒரு உயிர் உருவாவது தாயின் கருவரையில் தான். கோவிலின் கற்பகிரகம் இருக்கும் இடத்திற்கும் கருவரை என்று தான் சொல்கிறோம். அங்கே உருவ வடிவில் இருக்கும் லிங்க வடிவமும் முதன் முதலில் ஒரு தாயின் வயிற்றில் உருவாகும் உயிரின் வடிவமும் ஒன்று போல் இருக்கும். 

இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். இந்த உயிர் தோன்றுவதை விளக்குவதற்கு கோவில் சுவற்றில் வெள்ளை காவி நிறத்தில் வண்ணம் அடித்து வைத்தார்கள். 

ஆணின் வெள்ளை நிற விந்து பெண்ணின் காவி நிற அண்டத்தில் செர்ந்து உயிர் உருவாகும் இடம் கருவரை. அதன் முதல் வடிவம் லிங்க வடிவம். அதை கோவில் வடிவத்தில் நம் முன்னோர்கள் அமைத்து வைத்தார்கள்.






Saturday, January 12, 2013

யானை - நரி

காட்டில் வாழும் விலங்குகளில் அறிவுடைய விலங்கு எதுன்னு பார்த்தா நிறைய பேர் நரி தான்னு சொல்றாங்க. ஆனா நரியின் அறிவு வஞ்சனையுடையது என்று பல பேருக்கு தெரியாது.

யானை மிகவும் கணமான மரங்களை தூக்கும் சக்தியிடையது. காட்டின் குறுக்கே ஓடும் ஆற்றைக் கடக்கும் போது தன் தும்பிக்கையை வைத்து ஆழம் பார்த்துவிட்டுத் தான் காலை வைக்கும். இவற்றையெல்லாம் விட கீழே விழுந்த குண்டூசியை எடுக்கும் ஆற்றல் கொண்டது. ஆக தன் அறிவால் பிறருக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் நடந்து கொள்ளும்.

ஆனால் நரியோ வஞ்சனை கொண்டது. அதன் அறிவு அதனையும் அதை சார்ந்திருக்கும் இனத்தையும் அழித்துவிடும்.

Friday, January 11, 2013

காந்தியும் அலெக்சாண்டரும்

காந்தியும் அலெக்சாண்டரும் எதிர் எதிர் கருத்துள்ளவர்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.

காந்தியார் போர் வேண்டாம் என்று சொல்வதோடு அதை முற்றிலும் வெறுப்பவர். கடைசிவரை தன் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அகிம்சை வழியில் போராடியவர்.

அலெக்சாண்டர் பல போர்க்களங்களைப் பார்த்தவன். வாழ்நாள் முழுவதும் போர்க்களத்திலேயே கழித்தவன். போர்தான் சரி என்று நினைப்பவன்.

ஒற்றுமை ?

ஒருமுறை அலெக்சாண்டரும் அவன் படையினரும் போர் தொடுக்க ஒரு நாட்டை நோக்கி பாலைவனம் வழியாக சென்று கொண்டிருந்தனர். வெகுதூரம் பயணித்தனர். அப்போது அலெக்சாண்டருக்கு தாகம் ஏற்பட்டது. தன் பையில் தண்ணீர் இல்லாததால் படையினரை நோக்கி யாராவது தண்ணீர் வைத்திருந்தால் தருமாறு வேண்டினான். ஒரு படைவீரனைத் தவிர எல்லோரிடம் இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அந்த படைவீரன் தன் பையில் இருக்கும் தண்ணீரை அப்படியே கொடுக்க வேண்டாம் என்று எண்ணி தன் கவசத்தில் ஊற்றி இந்தாருங்கள் என்றான்.

அப்போது அலெக்சாண்டர் தன் படையில் இருக்கும் அனைவரும் தாகத்தோடு தவிப்பதை கண்டு இதை நான் அருந்த மாட்டேன். நீங்கள் அனைவரும் தாகத்தோடு இருப்பது போல் நானும் இருக்கிறேன். எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கும் பட்சத்தில் நானும் அருந்துகிறேன் என்றான்.

ஆனால் படைவீரனோ எங்கள் குழந்தைகள் நலனுக்காவது இதை அருந்த வேண்டினான். ஏனென்றால் எங்களுக்கு எதாவது ஆனால் எங்கள் குழந்தைகளை நீங்கள் காப்பாற்றுவீர்கள் அதற்காகவாவது நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றான்.

உடனே தண்ணீரை நீட்டுமாறு கேட்டான். படைவீரன் நீட்ட அதை தட்டிவிட்டு பயணத்தை தொடருங்கள் என்று படையினரை ஆணையிட்டான்.

காந்தி ஒரு முறை வேறு ஊருக்கு செல்ல ரயில் நிலையம் வந்தார். வேலைப் பளு காரணமாக தாமதமாக வந்ததால் ரயில் கிளம்பிவிட்டது. அவசர அவசரமாக ஏறும் போது காலில் உள்ள ஒரு செருப்பு கீழே விழுந்தது. அவர் எண்ண நினைத்தாரோ மற்றோரு செருப்பையும் கழற்றி அந்த செருப்பு இருக்கும் இடத்தில் வீசி எறிந்தார். கூட வந்தவர் ஏன் என்று கேட்க ஒரு செருப்பை வைத்துக் கொண்டு நான் ஒன்றுமே செய்ய முடியாது. கீழே இறங்கி அந்த செருப்பை எடுத்து திரும்ப ரயிலில் ஏறும் வலிமையும் எனக்கு கிடையாது. கீழே விழுந்த ஒரு செருப்பை யார் எடுத்தாலும் அவருக்கு பயன்படட்டுமே என்று இந்த செருப்பையும் கழற்றி வீசினேன் என்றார்.

நல்ல தலைவனுக்கு அடையாளமாக இருவரும் விளங்கினார்கள். அலெக்சாண்டர் தன் படைவீரர்களின் நலனுக்காக தானும் தண்ணீர் அருந்தவில்லை. அதேபோல் காந்தியும் மற்றவர் நலனை கருத்தில் கொண்டு மற்றோரு செருப்பையும் கழற்றி வீசினார்.

இருவரும் வேறு எதிர் எதிர் துருவத்தில் இருந்தால் கூட தலைவனுக்கு உண்டான குணத்தில் ஒன்றாக இருந்தார்கள்.

Thursday, January 10, 2013

கிராமத்துல பாட்டு

தானானது தானானது தானானது தானா,
தனதானது தனதானது தனதானது தானா.

இது கிராமத்துல பாட்டு பாட பயன்படுத்துகிற பண், தாளம். கோடங்கின்னு வச்சு அடிச்சிகிட்டு வருவாங்க.

இதற்குள் சில தத்துவங்களை சொல்கிறார்கள்.

தானானது - தான் என்று நினைப்பது தான் தானா? இது உடம்பா உயிரா? தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது சரிதானா? தன் பெயர் தான் தன்னோடதா?

தனதானது - உன்னுடையது என்று நினைப்பது உன்னுடையதுதானா? நேற்று எவரிடமோ இருந்தது, இன்று உன்னிடம், நாளை யாரிடமோ?

இதையெல்லாம் சொல்வதாக பாட்டு தன்னகரத்தை பயன்படுத்தி பாடுகிறார்கள்.

தமிழ்ல தாலாட்டு பாடல்


தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று எழுத்துக்களை பிரித்து வைத்து எந்த எழுத்தை எங்கே எப்படி பயன்படுத்துவது என்பதை வாழ்க்கை முறையில் சொல்லியிருக்கிறார்கள்.

வல்லின எழுத்துக்களை வைத்து தாலாட்டு பாடக் கூடாது.  குழந்தைகள் பயப்படும்படி இருக்கும் ஒலி கொண்டது வல்லினம்.

க ச ட த ப ற என்று பாடும் போது கடினமான ஒலி ஏற்படும்.

மெல்லினத்திலும் தாலாட்டு பாட கூடாது.

ங, ஞ, ண, ந, ம, ன என்று மூக்கைப் பிடித்துக் கொண்டும் பாடக்கூடாது. குழந்தை அழும் சூழ்நிலை ஏற்படுமாம்.

ஆதலால் இடையினத்தில் வரும் எழுத்துக்களை வைத்து பாடினால் குழந்தை தூங்க இதமான ஒலி ஏற்படும். இது வல்லினத்தளவு பயமுறுத்தாது, மெல்லினத்தளவு குழந்தைக்கு அடங்கி போகாது. குழந்தையை தூங்க வைக்கும்.

ஆகவே இடையின ரா பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆராரோ ஆரிராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரிராரோ ஆரீராரோ

இதிலிம் சில தத்துவங்களை சொல்வது போல் பாடுகிறார்கள்.

ஆராரோ - நீ யாரோ, நான் யாரோ, இங்கு நாம் இருவரும் இணைந்திருக்கிறோம் என்று தாய் குழந்தையைப் பார்த்து சொல்கிறாளாம்

ஆரிராரோ -  யாரை இழந்து யாரை பெறுவோம் என்று சொல்ல முடியாது என்கிறாள்.

ஆரீராரோ - யார் இருப்பார்கள் என்று தெரியாது, இருந்தும் நாம் இருவரும் இணைந்திருக்கிறோம்



புத்தனும் சீடனும்


புத்தர் ஒரு ஊர் வழியாக போய்க்கொண்டிருந்தார். அந்த ஊர் மக்களுக்கு அவரையும் அவரின் எண்ணங்களையும் பிடிக்காது. அதனால் எல்லோரும் சேர்ந்து அவரை வாய்க்கு வந்தபடி திட்டினர். வந்தவன் போனவன் எல்லாம் திட்டி தீர்த்துகொண்டிருக்க அவரது சீடரில் ஒருவரான ஆனந்தனுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.

புத்தரிடம் சென்று வேறு ஊருக்கு செல்லலாம் இங்கே ஒரு நிமிடம் கூட இருக்க வேண்டாம் என்றான்.

அதற்குள் மாலை நேரம் ஆக புத்தர் மக்களிடம் வேறு ஊருக்கு வருவதாக சொல்லிவிட்டேன். அங்கே சென்று பிச்சை எடுத்துவிட்டு பிறகு வருகிறேன். அதற்குப்பின் நீங்கள் பேச வேண்டியதை பேசுங்கள் என்றார்.

சீடனோ ஏன் இவ்வளவு பேசுயும் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு புத்தர் சொன்னது.

"மக்களுக்கு திட்டுவது மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் வேலையை செய்கிறார்கள். அப்படி திட்டுவதால் சந்தோசமாக இருப்பதாக எண்ணுகிறார்கள். பேசிவிட்டு போகட்டும்.

இவர்கள் பேசுவதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதனால் என் வேலையே நான் செய்கிறேன்" என்றார்.

Wednesday, January 9, 2013

இருமுடி கட்டுவது ஏன்?

ஐயப்ப தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் இருமுடி கட்டுவது ஏன் என்று யோசிக்க வேண்டும்.

மனிதன் பாவங்களை ஒரு மூட்டையாகவும், புண்ணியங்களை ஒரு மூட்டையாகவும் தலையில் கட்டிக் கொண்டு அலைகிறான் என்பதை சொல்வதாக இருக்கிறது. ஒரு பக்கம் நாம் கடவுளுக்கு என்ன படைக்கிறோமோ அதை புண்ணியமூட்டையாகவும், நம் பாவங்களை எல்லாம் இன்னொரு மூட்டையாகவும் கட்டிக் கொண்டு செல்வதாக அமைக்கப் பட்டிருக்கிறது.

இருந்தாலும் ஏன் அதை தலையில் வைத்து செல்ல வேண்டும் ?

மலைமீது மிகவும் கடினமான பாதை வழியாக பக்தர்கள் ஏறுகின்றனர். அதனால் புவிஈர்ப்பு விசையானது பாதத்தில் மையம் கொள்ளுமானால் இன்னும் கடினமாக இருக்கும். அதைப் போக்க தலைமீது இருபக்கமும் பாரம் இருந்தால் புவிஈர்ப்பு விசையானது தலையில் மையம் கொண்டு மலையேற உதவியாக இருக்கும் என்பதால் இந்த வழக்கம் வந்தது.

பதினெட்டு படிகள் - ஐயப்பன்

பதினெட்டு படி ஏறி ஐயப்ப தரிசனம் காணப்போகும் மக்கள் ஏன், எதற்கு என்ற கேள்வி கேட்டார்களா என்று தெரியவில்லை.

முதல் ஐந்து படி நம் ஞான இந்திரியங்களான கண், காது, மூக்கு, வாய் மற்றும் நாக்கு என்பதை குறிப்பதாகும்.

கண்களால் பார்ப்பது, காதால் கேட்பது, மூக்கினால் நுகர்வது, தோலின் தொடும் உணர்ச்சி இவைகளை அடக்கி ஆளவேண்டும் எனச் சொல்கிறது முதல் ஐந்து படிகள்.

பின் வரும் ஐந்து படிகள் கர்ம இந்திரியங்களான வாக், கை, கால், பாயுரு, உபஸ்தம் என்பதைக் குறிப்பதாகும். இவைகளை கடந்து ஒரு மனிதன் வரவேண்டும் என்பதாகும்.

அதன் பின் வரும் நான்கு படிகள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பதாகும். இவைகளை கடந்து மனிதன் வரவேண்டும் என்பதை சொல்கிறது.

கடைசியில் சத்வகுணம், தமோகுணம், ரஜோகுணம் என்ற மூன்று குணங்களையும் கடந்து வரவேண்டும் என சொல்லப்படுகிறது.

சத்வகுணம் : பாவங்கள், நோய்கள் அற்றவையாகவும், இன்பச்சேர்க்கையாலும், ஞானச்சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது. தூய்மையானது.

ரஜோகுணம் : இது விருப்பம் ஆசை சம்பந்தப்பட்டது.

தமோகுணம் : இது தாமதாமாக சிந்திப்பதைக் குறிக்கிறது.  தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது.

ஆக மொத்தம் 17 படிகளாயிற்று. இதையெல்லாம் கடந்து பிம்ம நிலையான பதினெட்டாம் படிக்கு வந்தால் இறைவனை தரிசிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Friday, January 4, 2013

வால்மீகி - கம்பன் வித்தியாசம்


ராமாயணத்தில் பரதன் காட்டுக்கு வந்து குகனிடம் ராமன் எங்கே எனக் கேட்க அதற்கு குகன் இப்படி பதில் சொல்வான்.

"அல்லையாண் டமைந்த மேனி யழகனும் அவளும் துஞ்ச"

ராமனை புகழ்ந்து பாடிவிட்டு சீதையைப் பற்றி சொல்லும்போது "அவளும் தூங்கினாள்" என்று சொன்னான் கம்பன். அங்கே குகன் சீதையை கண்ணால் கூட கண்டதில்லை என்பதை சொல்லாமல் சொன்னான்.


கோசல நாட்டைப் பற்றி சொல்லும்போது வால்மீகி மிகவும் சொற்ப வார்த்தைகளை பயன்படுத்தி சொன்னதை கம்பன் அதை மிகைப்படுத்தி அங்கிருக்கும் மக்கள் ஐம்புலன்களை அடக்கி வாழ்ந்தனர் என்று புகழ்ந்து பாடுவான்.

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
தாசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்

வால்மீகி சொன்னது : வாலி சுக்ரீவனின் நாட்டையும் அவன் மனைவியையும் அபகரித்துக் கொண்டு தான் அனுபவித்தான். வாலியை கொன்றபின் பின் அவன் மனைவியை சுக்ரீவன் அந்தப்புரத்து அரசி ஆக்கினான்.

கம்பன் சொன்னது : வாலியை கொன்றபின் அவன் மனைவியை சுக்ரீவன் நாட்டின் அரசமாதாவாக்கினான்.


எல்லா இலக்கியமும் நல் ஒழிக்கத்தைத்தான் கற்றுக் கொடுக்கிறது. இராமயணத்தில் உள்ள இந்த மூன்று இடமும் பெண்ணை தப்பான எண்ணத்துடன் பார்க்கக் கூடாது என்பதையும், ஐம்புலன்களை அடக்கி வாழ வேண்டும் என்பதையும் சொல்கிறது.