Friday, June 28, 2013

மறுபிறவி

உடல்வழி சிந்தனைவழி என்று இரண்டு வகையில் இதைப் பற்றி யோசிக்கலாம். ஒருவர் இறந்த பின் மீண்டும் உயிர்பெற்று இவ்வையகத்தில் பிறப்பது அல்லது சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு எண்ணத்தில் செயலில் தன்னைத் தானே உருமாற்றிக் கொள்வது.

மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வனவாசம் போவதற்கு முன், வனவாசத்திற்கு பின் என்று சிந்தனையில் பெரிய மாற்றம் கொண்டிருந்தனர். 

வனவாசத்திற்கு முன் பாண்டவர்களிடம் திமிர், தாம் பேரரசை ஆள்கிறோம் என்ற பகட்டு, சூதாடுவது அதுவும் தன் தம்பிகளை முதலில் வைத்து ஆடாமல் சித்தி மகனான நகுலனை வைத்து ஆடுவது, யாருமே கட்டாத வடிவத்தில் சிறந்த மாளிகை கட்ட பெரிய காட்டை அழிப்பது என எல்லாவகையான குணாதிசயங்களை கொண்டிருந்தனர்.

வனவாசத்திற்குப் பின் இந்த குணங்களில் மாற்றம் ஏற்பட்டு நல்ல மனித நேயமுள்ளவர்களாக திரும்பி வந்தனர்.
எந்த நகுலனை வைத்து தர்மன் சூதாடினாரோ அதே நகுலனை காட்டில் நடந்த பிரச்சனையில் தம்பிகளை முதலில் காப்பற்ற வேண்டும் என தோன்றாமல் நகுலனைக் காப்பாற்றுகிறார்.

இதுவே மறுபிறவி எடுத்தது போல்தான். இப்போது, இங்கு, இந்த நாட்டில், மறுபிறவி எடுப்பது என்பது பற்றி தவறான கருத்தை திணித்துக் கொண்டிருக்கின்றனர். 

மறுபிறவி எடுப்போம் சிந்தனையில், செயலில்.

Monday, June 10, 2013

சொர்க்கம் நரகம்

ஒரு ராணுவ தளபதி புத்தரைப் பார்த்து சொர்க்கம் நரகம் என்றால் என்ன என்று கேட்டான்.

அதற்கு அவரோ "நீ ராணுவ வீரனைப் போல் இல்லையே? ராணுவ தளபதியைப் போல் தோற்றம் இல்லையே" என்றார்.

அதற்கு அவன் கோபப்பட்டு தன் வாளை உருவி புத்தரின் கழுத்தில் வைத்து கொன்று விடுவேன் என்று சொல்லி மிரட்டினான்.

உடனே புத்தர் இதுதான் "நரகம்" என்றார். ராணுவ வீரன் புத்தரின் வார்த்தையை, நரகம் என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டவனாக "மன்னிக்கவும். நான் மிகப்பெரிய தவறு செய்ய முற்பட்டேன். தவறுக்காக வருந்துகிறேன்" என்றான்.

உடனே புத்தர் இதுதான் "சொர்க்கம்" என்றார்.

சம நிலை

ஒருவர் தனது வீட்டின் வாசலில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் வளர்த்த பூனை ஒரு எலியைப் பிடித்து உண்ண ஆரம்பித்தது. எலி கதர கதர பூனை தின்று முடித்தது. இதைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

மற்றொரு நாள் இதே பூனை அவர் வளர்த்த கிளியைப் பிடித்து உண்ண தொடங்கியது. இவர் உடனே கிளியை காப்பாற்ற பூனையை விரட்ட ஆரம்பித்தார். பூனையோ கிளியை விடவில்லை. முழுவதும் தின்று முடித்தது. இவர் மிகவும் வருத்தப்பட்டார்.

மற்றொரு நாள் இந்த பூனை ஒரு குருவியை பிடித்து உண்ண தொடங்கியது. இதைப் பார்த்தவர் எந்த வித சலனமும் உணர்வும் இல்லாதவராக கண்டுகொள்ளாமல் இருந்தார்.

தனக்கு வேண்டாத எலியைப் பிடித்து உண்ணும்போது மகிழ்ச்சி, வேண்டிய கிளியைப் பிடித்து உண்ணும்போது வருத்தம், வேண்டிய வேண்டாத இப்படி எதுவுமே இல்லாத குருவியை உண்ணும்போது உணர்வற்ற நிலை. அப்போது தான் பூனைனா இப்படித்தான் எதையாவது திங்கும் என்றும் அதன் இயற்கை சுபாவமே அதுதான் என்றும் உணர்ந்தார்.

இந்த உலகில் ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் இருப்பார்கள். அவர்களுக்காக நாம் உணர்ச்சி வசப்பட்டாலோ பதில் சொல்ல ஆரம்பித்தாலோ நம் வாழ்வின் முழு நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருப்போம்.