Friday, January 11, 2013

காந்தியும் அலெக்சாண்டரும்

காந்தியும் அலெக்சாண்டரும் எதிர் எதிர் கருத்துள்ளவர்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.

காந்தியார் போர் வேண்டாம் என்று சொல்வதோடு அதை முற்றிலும் வெறுப்பவர். கடைசிவரை தன் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அகிம்சை வழியில் போராடியவர்.

அலெக்சாண்டர் பல போர்க்களங்களைப் பார்த்தவன். வாழ்நாள் முழுவதும் போர்க்களத்திலேயே கழித்தவன். போர்தான் சரி என்று நினைப்பவன்.

ஒற்றுமை ?

ஒருமுறை அலெக்சாண்டரும் அவன் படையினரும் போர் தொடுக்க ஒரு நாட்டை நோக்கி பாலைவனம் வழியாக சென்று கொண்டிருந்தனர். வெகுதூரம் பயணித்தனர். அப்போது அலெக்சாண்டருக்கு தாகம் ஏற்பட்டது. தன் பையில் தண்ணீர் இல்லாததால் படையினரை நோக்கி யாராவது தண்ணீர் வைத்திருந்தால் தருமாறு வேண்டினான். ஒரு படைவீரனைத் தவிர எல்லோரிடம் இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அந்த படைவீரன் தன் பையில் இருக்கும் தண்ணீரை அப்படியே கொடுக்க வேண்டாம் என்று எண்ணி தன் கவசத்தில் ஊற்றி இந்தாருங்கள் என்றான்.

அப்போது அலெக்சாண்டர் தன் படையில் இருக்கும் அனைவரும் தாகத்தோடு தவிப்பதை கண்டு இதை நான் அருந்த மாட்டேன். நீங்கள் அனைவரும் தாகத்தோடு இருப்பது போல் நானும் இருக்கிறேன். எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கும் பட்சத்தில் நானும் அருந்துகிறேன் என்றான்.

ஆனால் படைவீரனோ எங்கள் குழந்தைகள் நலனுக்காவது இதை அருந்த வேண்டினான். ஏனென்றால் எங்களுக்கு எதாவது ஆனால் எங்கள் குழந்தைகளை நீங்கள் காப்பாற்றுவீர்கள் அதற்காகவாவது நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்றான்.

உடனே தண்ணீரை நீட்டுமாறு கேட்டான். படைவீரன் நீட்ட அதை தட்டிவிட்டு பயணத்தை தொடருங்கள் என்று படையினரை ஆணையிட்டான்.

காந்தி ஒரு முறை வேறு ஊருக்கு செல்ல ரயில் நிலையம் வந்தார். வேலைப் பளு காரணமாக தாமதமாக வந்ததால் ரயில் கிளம்பிவிட்டது. அவசர அவசரமாக ஏறும் போது காலில் உள்ள ஒரு செருப்பு கீழே விழுந்தது. அவர் எண்ண நினைத்தாரோ மற்றோரு செருப்பையும் கழற்றி அந்த செருப்பு இருக்கும் இடத்தில் வீசி எறிந்தார். கூட வந்தவர் ஏன் என்று கேட்க ஒரு செருப்பை வைத்துக் கொண்டு நான் ஒன்றுமே செய்ய முடியாது. கீழே இறங்கி அந்த செருப்பை எடுத்து திரும்ப ரயிலில் ஏறும் வலிமையும் எனக்கு கிடையாது. கீழே விழுந்த ஒரு செருப்பை யார் எடுத்தாலும் அவருக்கு பயன்படட்டுமே என்று இந்த செருப்பையும் கழற்றி வீசினேன் என்றார்.

நல்ல தலைவனுக்கு அடையாளமாக இருவரும் விளங்கினார்கள். அலெக்சாண்டர் தன் படைவீரர்களின் நலனுக்காக தானும் தண்ணீர் அருந்தவில்லை. அதேபோல் காந்தியும் மற்றவர் நலனை கருத்தில் கொண்டு மற்றோரு செருப்பையும் கழற்றி வீசினார்.

இருவரும் வேறு எதிர் எதிர் துருவத்தில் இருந்தால் கூட தலைவனுக்கு உண்டான குணத்தில் ஒன்றாக இருந்தார்கள்.

Thursday, January 10, 2013

கிராமத்துல பாட்டு

தானானது தானானது தானானது தானா,
தனதானது தனதானது தனதானது தானா.

இது கிராமத்துல பாட்டு பாட பயன்படுத்துகிற பண், தாளம். கோடங்கின்னு வச்சு அடிச்சிகிட்டு வருவாங்க.

இதற்குள் சில தத்துவங்களை சொல்கிறார்கள்.

தானானது - தான் என்று நினைப்பது தான் தானா? இது உடம்பா உயிரா? தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பது சரிதானா? தன் பெயர் தான் தன்னோடதா?

தனதானது - உன்னுடையது என்று நினைப்பது உன்னுடையதுதானா? நேற்று எவரிடமோ இருந்தது, இன்று உன்னிடம், நாளை யாரிடமோ?

இதையெல்லாம் சொல்வதாக பாட்டு தன்னகரத்தை பயன்படுத்தி பாடுகிறார்கள்.

தமிழ்ல தாலாட்டு பாடல்


தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று எழுத்துக்களை பிரித்து வைத்து எந்த எழுத்தை எங்கே எப்படி பயன்படுத்துவது என்பதை வாழ்க்கை முறையில் சொல்லியிருக்கிறார்கள்.

வல்லின எழுத்துக்களை வைத்து தாலாட்டு பாடக் கூடாது.  குழந்தைகள் பயப்படும்படி இருக்கும் ஒலி கொண்டது வல்லினம்.

க ச ட த ப ற என்று பாடும் போது கடினமான ஒலி ஏற்படும்.

மெல்லினத்திலும் தாலாட்டு பாட கூடாது.

ங, ஞ, ண, ந, ம, ன என்று மூக்கைப் பிடித்துக் கொண்டும் பாடக்கூடாது. குழந்தை அழும் சூழ்நிலை ஏற்படுமாம்.

ஆதலால் இடையினத்தில் வரும் எழுத்துக்களை வைத்து பாடினால் குழந்தை தூங்க இதமான ஒலி ஏற்படும். இது வல்லினத்தளவு பயமுறுத்தாது, மெல்லினத்தளவு குழந்தைக்கு அடங்கி போகாது. குழந்தையை தூங்க வைக்கும்.

ஆகவே இடையின ரா பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

ஆராரோ ஆரிராரோ ஆரீராரோ
ஆராரோ ஆரிராரோ ஆரீராரோ

இதிலிம் சில தத்துவங்களை சொல்வது போல் பாடுகிறார்கள்.

ஆராரோ - நீ யாரோ, நான் யாரோ, இங்கு நாம் இருவரும் இணைந்திருக்கிறோம் என்று தாய் குழந்தையைப் பார்த்து சொல்கிறாளாம்

ஆரிராரோ -  யாரை இழந்து யாரை பெறுவோம் என்று சொல்ல முடியாது என்கிறாள்.

ஆரீராரோ - யார் இருப்பார்கள் என்று தெரியாது, இருந்தும் நாம் இருவரும் இணைந்திருக்கிறோம்



புத்தனும் சீடனும்


புத்தர் ஒரு ஊர் வழியாக போய்க்கொண்டிருந்தார். அந்த ஊர் மக்களுக்கு அவரையும் அவரின் எண்ணங்களையும் பிடிக்காது. அதனால் எல்லோரும் சேர்ந்து அவரை வாய்க்கு வந்தபடி திட்டினர். வந்தவன் போனவன் எல்லாம் திட்டி தீர்த்துகொண்டிருக்க அவரது சீடரில் ஒருவரான ஆனந்தனுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது.

புத்தரிடம் சென்று வேறு ஊருக்கு செல்லலாம் இங்கே ஒரு நிமிடம் கூட இருக்க வேண்டாம் என்றான்.

அதற்குள் மாலை நேரம் ஆக புத்தர் மக்களிடம் வேறு ஊருக்கு வருவதாக சொல்லிவிட்டேன். அங்கே சென்று பிச்சை எடுத்துவிட்டு பிறகு வருகிறேன். அதற்குப்பின் நீங்கள் பேச வேண்டியதை பேசுங்கள் என்றார்.

சீடனோ ஏன் இவ்வளவு பேசுயும் அமைதியாக இருக்கிறீர்கள் என்று கேட்க அதற்கு புத்தர் சொன்னது.

"மக்களுக்கு திட்டுவது மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் வேலையை செய்கிறார்கள். அப்படி திட்டுவதால் சந்தோசமாக இருப்பதாக எண்ணுகிறார்கள். பேசிவிட்டு போகட்டும்.

இவர்கள் பேசுவதால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதனால் என் வேலையே நான் செய்கிறேன்" என்றார்.

Wednesday, January 9, 2013

இருமுடி கட்டுவது ஏன்?

ஐயப்ப தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்கள் இருமுடி கட்டுவது ஏன் என்று யோசிக்க வேண்டும்.

மனிதன் பாவங்களை ஒரு மூட்டையாகவும், புண்ணியங்களை ஒரு மூட்டையாகவும் தலையில் கட்டிக் கொண்டு அலைகிறான் என்பதை சொல்வதாக இருக்கிறது. ஒரு பக்கம் நாம் கடவுளுக்கு என்ன படைக்கிறோமோ அதை புண்ணியமூட்டையாகவும், நம் பாவங்களை எல்லாம் இன்னொரு மூட்டையாகவும் கட்டிக் கொண்டு செல்வதாக அமைக்கப் பட்டிருக்கிறது.

இருந்தாலும் ஏன் அதை தலையில் வைத்து செல்ல வேண்டும் ?

மலைமீது மிகவும் கடினமான பாதை வழியாக பக்தர்கள் ஏறுகின்றனர். அதனால் புவிஈர்ப்பு விசையானது பாதத்தில் மையம் கொள்ளுமானால் இன்னும் கடினமாக இருக்கும். அதைப் போக்க தலைமீது இருபக்கமும் பாரம் இருந்தால் புவிஈர்ப்பு விசையானது தலையில் மையம் கொண்டு மலையேற உதவியாக இருக்கும் என்பதால் இந்த வழக்கம் வந்தது.

பதினெட்டு படிகள் - ஐயப்பன்

பதினெட்டு படி ஏறி ஐயப்ப தரிசனம் காணப்போகும் மக்கள் ஏன், எதற்கு என்ற கேள்வி கேட்டார்களா என்று தெரியவில்லை.

முதல் ஐந்து படி நம் ஞான இந்திரியங்களான கண், காது, மூக்கு, வாய் மற்றும் நாக்கு என்பதை குறிப்பதாகும்.

கண்களால் பார்ப்பது, காதால் கேட்பது, மூக்கினால் நுகர்வது, தோலின் தொடும் உணர்ச்சி இவைகளை அடக்கி ஆளவேண்டும் எனச் சொல்கிறது முதல் ஐந்து படிகள்.

பின் வரும் ஐந்து படிகள் கர்ம இந்திரியங்களான வாக், கை, கால், பாயுரு, உபஸ்தம் என்பதைக் குறிப்பதாகும். இவைகளை கடந்து ஒரு மனிதன் வரவேண்டும் என்பதாகும்.

அதன் பின் வரும் நான்கு படிகள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பதாகும். இவைகளை கடந்து மனிதன் வரவேண்டும் என்பதை சொல்கிறது.

கடைசியில் சத்வகுணம், தமோகுணம், ரஜோகுணம் என்ற மூன்று குணங்களையும் கடந்து வரவேண்டும் என சொல்லப்படுகிறது.

சத்வகுணம் : பாவங்கள், நோய்கள் அற்றவையாகவும், இன்பச்சேர்க்கையாலும், ஞானச்சேர்க்கையாலும் கட்டுப்படுத்துவது. தூய்மையானது.

ரஜோகுணம் : இது விருப்பம் ஆசை சம்பந்தப்பட்டது.

தமோகுணம் : இது தாமதாமாக சிந்திப்பதைக் குறிக்கிறது.  தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது கட்டுப்படுத்துகிறது.

ஆக மொத்தம் 17 படிகளாயிற்று. இதையெல்லாம் கடந்து பிம்ம நிலையான பதினெட்டாம் படிக்கு வந்தால் இறைவனை தரிசிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Friday, January 4, 2013

வால்மீகி - கம்பன் வித்தியாசம்


ராமாயணத்தில் பரதன் காட்டுக்கு வந்து குகனிடம் ராமன் எங்கே எனக் கேட்க அதற்கு குகன் இப்படி பதில் சொல்வான்.

"அல்லையாண் டமைந்த மேனி யழகனும் அவளும் துஞ்ச"

ராமனை புகழ்ந்து பாடிவிட்டு சீதையைப் பற்றி சொல்லும்போது "அவளும் தூங்கினாள்" என்று சொன்னான் கம்பன். அங்கே குகன் சீதையை கண்ணால் கூட கண்டதில்லை என்பதை சொல்லாமல் சொன்னான்.


கோசல நாட்டைப் பற்றி சொல்லும்போது வால்மீகி மிகவும் சொற்ப வார்த்தைகளை பயன்படுத்தி சொன்னதை கம்பன் அதை மிகைப்படுத்தி அங்கிருக்கும் மக்கள் ஐம்புலன்களை அடக்கி வாழ்ந்தனர் என்று புகழ்ந்து பாடுவான்.

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்,
தாசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்

வால்மீகி சொன்னது : வாலி சுக்ரீவனின் நாட்டையும் அவன் மனைவியையும் அபகரித்துக் கொண்டு தான் அனுபவித்தான். வாலியை கொன்றபின் பின் அவன் மனைவியை சுக்ரீவன் அந்தப்புரத்து அரசி ஆக்கினான்.

கம்பன் சொன்னது : வாலியை கொன்றபின் அவன் மனைவியை சுக்ரீவன் நாட்டின் அரசமாதாவாக்கினான்.


எல்லா இலக்கியமும் நல் ஒழிக்கத்தைத்தான் கற்றுக் கொடுக்கிறது. இராமயணத்தில் உள்ள இந்த மூன்று இடமும் பெண்ணை தப்பான எண்ணத்துடன் பார்க்கக் கூடாது என்பதையும், ஐம்புலன்களை அடக்கி வாழ வேண்டும் என்பதையும் சொல்கிறது.